For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் – ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
12:12 PM Mar 12, 2025 IST | Web Editor
திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் – ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
Advertisement

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில் மாசித்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.  விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் தங்கச் சப்ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 8-ம் நாளில் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக
நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணியளவில் விசுவரூப தீபாரானையும், 5 மணியளவில் உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மாசித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது.

கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் 'அரோகரா'  கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது.

தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்தது. இந்த தேரோட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெறுகிறது.

Advertisement