மாசி பிரதோஷம் - சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!
விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு முன்பெல்லாம் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.
அதன் பின்னர் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட 8 விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று 25-ம் தேதி முதல் வரும் 28-ம் தேதி வரை என மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதனை முன்னிட்டு விருதுநகர், மதுரை, சென்னை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர். பின்னர் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.