அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் பலர் மாற்றம் - ராமதாஸ் அறிவிப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அன்புமணி ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து ராமதாஸ் நீக்கி வருகிறார். அந்த வகையில் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை பொறுப்பில் இருந்து நீக்கினார். பின்னர் அன்புமணி மீண்டும் அவர் அந்த பொறுப்பில் தொடருவார் என்று அறிவித்தார்.
சமீபத்தில் அன்புமணி ராமதாஸ், தனது ஆதரவாளர்களை திரட்டி ஆலோசனை நடத்தினார். மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க பாமக பொதுக்குழுவுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தெரிவித்ததோடு, உறுப்பினர் அடையாளத்தை புதுப்பிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கிய வண்ணம் உள்ளார்.
இந்த நிலையில் இன்று(ஜுன்.03) மீண்டும் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, புதியப் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். அந்த வகையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தலைவராக ராஜாராம், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முருகன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக பாண்டி காமாட்சி என்கின்ற பாரதி பாண்டியன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளராக ஈஸ்வரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை நியமனம் செய்துள்ளார்.