Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாம்பழம் கிலோ ரூ.1 க்கு விற்பனை... விவசாயிகள் வேதனை... சாலையோரம் கொட்டி செல்லும் அவலம்!

மாம்பழம் கிலோ ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 
04:11 PM Jun 16, 2025 IST | Web Editor
மாம்பழம் கிலோ ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 
Advertisement

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம்,
நல்லம்பள்ளி உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மா சாகுபடி நடந்து வருகிறது. பெங்களூரா, செந்தூரா, நீலம், அல்போன்சா, மல்கோவா, பீத்தர், பங்கனப்பள்ளி, இமாம் பசந்து, தோதாபுரி, மல்லிகா உள்ளிட்ட ரக மாம்பழங்கள் இங்கு சாகுபடியாகின்றன. தருமபுரி மாவட்டத்தின் வறட்சித் தன்மை கொண்ட நிலங்களில் விளையும் இந்த மாம்பழங்கள் பொதுவாகவே கூடுதல் இனிப்பு சுவையுடன் காணப்படுகின்றன.

Advertisement

இவ்வாறு தருமபுரி மாவட்டத்தில் சாகுபடியாகும் மாம்பழங்கள் உள்ளூர் விற்பனை
மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும்
விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒருசில விவசாயிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். மா சாகுபடி மூலம் சராசரியான லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மா சாகுபடியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நடப்பு ஆண்டில் மாம்பழங்களுக்கு கிடைத்து வரும் விலையால் மா விவசாயிகள் வேதனையும், கலக்கமும் அடைந்துள்ளனர்.

தற்போது பெங்களூரா மாம்பழங்கள் விவசாயிகளிடம் கிலோ 1 ரூபாய்க்கும், செந்தூரா கிலோ 2 ரூபாய்க்கும் என கொள்முதல் செய்யப்படுகிறது. இதர ரகங்களுக்கும் இவ்வாறே மிகக் குறைந்த விலை தான் கிடைத்து வருகிறது. இதனால் அறுவடை செய்யும் மாம்பழங்கள் விலையில்லாததால் ரோட்டோரங்களில் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் செய்வதறியாது தவிக்கும் மா விவசாயிகள் இழப்பீடு வழங்க வலியுறுத்தி பாலக்கோடு உட்பட ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘நடப்பு ஆண்டில் மா பூப்பு
பருவத்தின் தொடக்கத்தில் மழையின்மையால் வெம்மை தாங்காமல் பிஞ்சுகள் உதிரும் நிலை காணப்பட்டது. இருப்பினும் திடீரென அவ்வப்போது பெய்த மழையால் மரங்களில் ஓரளவு நிறைவாக பிஞ்சுகள் தங்கின. அதன்பிறகும் கூட சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து மாங்காய்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த இடையூறுகளையெல்லாம் கடந்தும் கூட நடப்பு ஆண்டில் மாமரங்கள் நிறைவாக காய்த்து சாகுபடியை நெருங்கிக் கொண்டிருந்தன.

ஆனால், துரதிருஷ்டவசமாக மாம்பழங்களின் விலை கடுமையாக
வீழ்ச்சியடைந்து மா சாகுபடி விவசாயிகளை கண்ணீரில் தள்ளியுள்ளது. தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்ட மாங்கூழ் தயாரிப்பு ஆலைகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மாங்கூழ் பல்வேறு நடைமுறை காரணங்களால் தேக்கமடைந்துள்ளது. கடந்த ஆண்டில் உற்பத்தியான சரக்கு இவ்வாறு தேக்கமடைந்துள்ளதால் நடப்பு ஆண்டில் பெரும்பாலான கூழ் உற்பத்தி ஆலைகள் இயங்கவில்லை. எனவே, கூழ் ஆலைகளுக்கும் விவசாயிகளால் மாம்பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை.

இதேபோல, கல்டார் மூலம் இடைப்போக விற்பனை மூலம் லாபம் ஈட்ட விரும்பும் சில மா விவசாயிகளும் இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளனர். மா உற்பத்திக்கு மாமரங்களின் வேர்களில் கல்டார் எனும் மருந்து கட்டப்படுகிறது.
இந்த மருந்தின் தாக்கம், மா மரங்களுக்கு பூப்புப் பருவம் முதல் அறுவடை வரை
சுமார் 4 முறை தெளிக்கப்படும் பூச்சி மருந்து, அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை பழக்கச் செய்ய கார்பைடு எனும் வேதிப்பொருள் பயன்பாடு ஆகியவற்றால் மாம்பழங்களில் வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் தாக்கம் அதிகமாக இருப்பதை அறியும் நுகர்வோர் மாம்பழங்களை சுவைக்க அச்சப்படுகின்றனர். இதுவும் மா தேக்கம் மற்றும் விலை வீழ்ச்சிக்கு காரணம்.

எனவே, மா சாகுபடியில் ஒருசில விவசாயிகள் பின்பற்றும் குறுக்கு வழிகளை அரசு
முழுமையாக தடுத்திட வேண்டும். இதுதவிர, மாங்கூழ் ஏற்றுமதியில் நிலவும்
சிக்கல்களை சரிசெய்திட வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் தேக்கமில்லாத மா கொள்முதலுக்கு அரசு உதவிட வேண்டும். இதுதவிர, நடப்பு ஆண்டில் நஷ்டமடைந்து நிற்கும் மா விவசாயிகளுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மா சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கிட வேண்டும்’ என்றனர்.

இதேபோல், மாம்பழங்களுக்கு பெயர் போன சேலத்திலும் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாம்பழங்கள் மற்றும் மாம்பழக்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும், திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் மாந்தோப்பில் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகளுக்கு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த வருடம் மாம்பழம் பழுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஜூஸ் ஃபேக்டரிகளுக்கு மாம்பழம் கொண்டு போகும் வியாபாரிகள் யாரும் வரவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாம்பழ விவசாயிகள், வியாபாரிகளிடம் சரியான பேச்சுவார்த்தை நடத்தி மாம்பழத்தின் வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்திற்கு உரிய விலை கிடைக்காமல் மாம்பழங்களை சாலையோரம் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

Tags :
#MangoFarmerFruitMango PriceMango Ratenews7 tamil
Advertisement
Next Article