நியூஸ்7 தமிழ் செய்தியால் எதிரொலித்த மாம்பழக் கொள்முதல் விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
மாம்பழ சாகுபடி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மா விவசாயிகளிடையே நியூஸ்7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம் மாம்பழத்தின் விலை வீழ்ச்சி மற்றும் கொள்முதல் பிரச்னைகளுடன் மாம்பழக் கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. இந்த கள ஆய்வின் எதிரொலியால் மாம்பழ விவசாயிகளுக்கு ஆதரவாக இழப்பீடு வழங்க கோரி அதிமுக, பாமக, நாதக உள்ளிட்ட பல கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தன.
இந்த நிலையில் மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட பிரதமர் மோடி மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “ மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும், மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிடவும், மாம்பழக் கூழுக்கான GST-யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திடவும்
பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் (MIS) செயல்படுத்தவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.