மானாமதுரை | 3 பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அண்ணா சிலை அருகே உள்ள வைகை ஆற்று பாலத்தில் புல்லட், பல்சர் மற்றும் ஸ்கூட்டி ஆகிய 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மானாமதுரை காந்திஜி நகரைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி பாலுவின் மகன் ராமச்சந்திரன் உயிரிழந்தார்.
மேலும் 4 பேர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (தந்தை மாணிக்கம்) பலத்த காயமடைந்ததை அடுத்து முதலுதவி கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சந்திரசேகரின் மகன் பிரகாஷ் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மற்ற இரண்டு பேர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல் உடற்கூராய்விற்காக மானாமதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.