மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா - சுவாமி, அம்மன் வீதி உலா!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை சுவாமியும் அம்மனும் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது.
பிரியாவிடையுடன் தங்கச்சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ முத்துராமையர் மண்டகப்படியில் எழுந்தருளிய சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாரதனைகள் காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுவாமியும், அம்மனும் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு அம்மன் சன்னதி, தேரடி, விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, டி.எம்.கோர்ட், மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், கீழமாசி வீதி உள்ளிட்ட இடங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து திருக்கோவிலை வந்தடைந்தனர்.
அப்போது நான்கு மாசி வீதிகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தனர். நான்கு மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் திருவீதி உலாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.