எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தனது சமூக வலைத்தளமான ட்விட்டர்
பக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்
கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஈரோடு டவுன் காவல்துறை எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு, சென்னை சிறப்பு
நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்துச் செய்யக்கோரி மீண்டும் எச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன்,
இந்த பதிவை பதிவிட்டது நீங்களா? என ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பில், ஆம் என பதிலளிக்கபட்டது. பின்னர் எச்.ராஜாவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.