யூடியூபர் #SavukkuShankar-க்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நில அபகரிப்பு தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது என தனது யூடியூப் சேனலில் பேட்டியளித்து, தவறான தகவல்களை பரப்பியதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 24ம் தேதி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில், சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் தொடர்ந்து இது போன்று தவறான தகவல்களை அளித்து வருவதாக வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.