For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு ஆஜராகாத #MadhabiPuri… அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

02:06 PM Oct 24, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு ஆஜராகாத  madhabipuri… அடுத்த கட்ட நடவடிக்கை என்ன
Advertisement

செபி தலைவர் மாதவி பூரி புச் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் (SEBI) தலைவராக பணியாற்றி வரும் மாதபி பூரி புச் மீது, ஹிண்டன்பர்க் அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதில், அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாகவே அதானியின் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மாதபி பூரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அதானி குழுமம் மீதான விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவித்தது. தன் மீதான குற்றச்சாட்டை மாதபி பூரி புச் மறுத்தார். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை எனவும், எங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை எனவும் மாதபி புரி தெரிவித்தார்.

மேலும், ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை தொடர்பாக செபி நோட்டீஸ் அனுப்பி இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் செபியின் பெயரை கெடுக்கும் வகையில் தற்போது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது என்று மாதபி புரி மற்றும் அவரது கணவர் இருவரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். மாதபி பூரி புச், விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. அவர், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை அவர் ரூ.16.8 கோடி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால், மாதபி புரி புச் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று கோரி மும்பை செபி தலைமையகம் முன்பு செபி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, மாதவி பூரி புச்-க்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையை தொடங்கியது. அவரிடம் விசாரிக்க பொதுக் கணக்குக் குழு சம்மன் அனுப்பியது. அதில், மாதபி பூரி புச் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று (அக்.24) காலை பொதுக் கணக்கு குழு முன் செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் உறுப்பினர்கள் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை.

இதுகுறித்து அக்குழுவின் தலைவர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களுடன் கூறியதாவது,

“தனிப்பட்ட காரணத்தினால் செபி தலைவர் மாதபி பூரி புச்சால் இன்று டெல்லிக்கு பயணிக்க முடியவில்லை என்ற தகவல் கிடைத்தது. மற்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்க முடியாததை தெரிவித்தனர். கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த அமர்வை மற்றொரு நாளுக்கு மாற்றியுள்ளோம்” என்றார்.

இதற்கிடையே, பொதுக் கணக்கு குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வேணுகோபால் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக பாஜக எம்பியும், அக்குழுவின் உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், "சிஏஜி அறிக்கையை விவாதிப்பதே பொதுக் கணக்கு குழுவின் வேலை. சிஏஜி அறிக்கையில் செபி பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், தாமாக முன்வந்து தன்னிச்சையாக சில விஷயங்களை செய்கிறார். எங்களை பேசவிடாமல், எழுந்து சென்றுவிட்டார்" என்றார். மேலும், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள், வேணுகோபாலுக்கு எதிராக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர்.

Tags :
Advertisement