உ.பி. அரசின் மதரஸா கல்வி சட்டம் - அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!
உத்தரப்பிரதேச அரசின் மதரஸா கல்வி சட்டத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களில் மதக் கல்வியை வழங்குவது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு மதரசா கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. இதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை அமர்வு சமீபத்தில் இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்தது.
2004-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைமையிலான அரசு மதரஸா கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து, அன்ஷுமன் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மதரஸா கல்வி சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது எனவும் மதச்சார்பின்மைக்கு எதிரானது எனவும் தீர்ப்பு வழங்கியது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உ.பி. முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 16,500 மற்றும் அங்கீகரிக்கப்படாத 8,500 மதரஸாக்களை சேர்ந்த சுமார் 2,00,000 மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்று மாநில மதரஸா வாரியம் தெரிவித்தது.
இந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மதரஸா வாரியத்தின் நோக்கமும், அதன் ஒழுங்குமுறையும் இயல்பான ஒன்று. வாரியம் அமைப்பது மதச்சார்பின்மையை மீறும் என்கிற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பார்வை சரியானது அல்ல என தெரிவித்த நீதிபதிகள் அலகபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தனர்.