மக்களவைத் தேர்தல் : தேர்தல் தொடர்பான புகார் எண்களை வெளியிட்ட வருமான வரித்துறை!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டுதேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் (மார்ச் - 16) அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நேற்று முதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது. இதனால் பல இடங்களில் அரசியல் கட்சிகள் படங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் தலைவர்களின் உருவச் சிலைகளை துணிகளால் மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக வருமான வரித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..
” நடைபெறவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றிய புகார்களை / தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டணம் இல்லா தொலைபேசி எண் / மின்னஞ்சல்/ புலனம் (whatsapp) மூலம் தொடர்பு கொள்ளலாம்.
தகவலை பகிர்ந்துகொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
கட்டணம் இல்லா தொலைபேசி எண் - 1800 425 6669
மின்னஞ்சல் : tn.electioncomplaints2024@incometax.gov.in
வாட்ஸ்ஆப் - 94453 94453
என வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.