தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வேட்புமனு தாக்கல்!
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இதனிடையே, தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி வந்தார். இந்நிலையில், ராணி ஸ்ரீகுமார் இன்று (மார்ச் 26) தென்காசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல்கிஷோரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.