எல்ஐசி நிகர லாபம் 17.1% அதிகரிப்பு!
கடந்த ஆண்டு டிச.31 அன்றுடன் முடிவடைந்த 9 மாத கால
செயல்பாட்டு சிறப்பம்சங்கள் குறித்து எல்.ஐ.சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
- எல்.ஐ.சி நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம், சென்ற ஆண்டு ரூ.26,913 கோடியிலிருந்து அதிகரித்து 29,138 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
- இந்த காலத்தில் தனிநபர் புது வணிக பிரீமிய வருமானம் 9.73% அதிகரித்து ரூ. 42,441 கோடியாகவும், மொத்த ப்ரீமிய வருமானம் 5.51% அதிகரித்து 3,40,563 கோடி ரூபாயாக உயந்துள்ளது.
- 31.12.2024 முடிவில் முதல் ப்ரீமிய வருமான அடிப்படையில் எல்.ஐ.சி. 57.42% சந்தை பங்களிப்போடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
- 31.12.2024 வரையிலான காலத்தில் நிர்வாகத்தின் கீழ் சொத்து மதிப்பு (AUM) 10.29 சதவிகிதம் அதிகரித்து 54,77,651 கோடிகளாக உயந்துள்ளது
- தனிநபர் வணிகத்தில் இலாபப் பங்களிப்பற்ற ஆண்டு பிரீமியம் சென்ற ஆண்டு 14.04 சதவிகித்திலிருந்து 27.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
- இலாபப் பங்களிப்பற்ற தனி நபர் ஆண்டு பிரீமியம் 106.52% அதிகரித்து ருபாய் 6813 கோடிகளாக உயர்ந்துள்ளது.
- புது வணிக மொத்த இலாப வரம்பு 17.1 % ஆக உயர்ந்துள்ளது.
- கடனளிப்பு விகிதம் (Solvency Ratio) 1.93 மடங்கிலிருந்து 2.02 மடங்காக அதிகரித்துள்ளது.
- ஒட்டுமொத்த செலவு விகிதம் 15.28% லிருந்து 12.97% ஆக குறைந்துள்ளது.
எல்ஐசியின் தலைவர் சித்தார்த் மொஹந்தி இதுகுறித்து கூறுகையில்,
“மாறி வரும் வணிக சூழலுக்கேற்ப மக்களின் தேவைகளுக்காக எங்கள் பாலிசி திட்டங்களை வடிவமைத்து வருகிறோம். டிசம்பர் 31, 2024 அன்றுடன் முடிவடைந்த காலத்தில் தனி நபர் வணிகத்தில் இலாபப் பங்களிப்பற்ற ஆண்டு பிரீமியம் சென்ற ஆண்டு 14.04 சதவிகித்திலிருந்து 27.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. புது வணிக இலாப வரம்பு 17.1 % ஆக அதிகரித்துள்ளது. மக்களுக்கு தேவையான காப்பீட்டு பாதுகாப்பை அதிகரிப்பதில் எல்ஐசி தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
நாட்டின் மகளிர் காப்பீட்டு விற்பனையின் மூலம் தற்சார்பு பெரும் எல்ஐசியின் பீமா சகி திட்டத்தை நமது பிரதமர் கடந்த 09.12.2024 அன்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் இதுவரை 1.25 லட்சம் பேர் பதிவு செய்து, 70,000 மகளிர் பீமா சகிக்களாக பணியாற்றி வருகின்றனர்.
எங்கள் டிஜிட்டல் முயற்சிகளின் பலன்கள் வரும் மாதங்களில் தெரிய வரும். மாறி வரும் வணிக சூழ்நிலைக்கேற்ப எங்கள் செயல்பாடுகளை தகவமைத்து கொள்ள தொடர்ந்து ஆதரவை தரும் அனைத்து பங்குதாரர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.