"மீண்டும் பள்ளிக்கு போகலாம்"... கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!
தமிழ்நாடு பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரையும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் 24-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
இதையும் படியுங்கள் : MI vs PBKS | ஸ்ரேயாஸ் அதிரடி… மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப்!
இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 2) திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைக் பயன்படுத்தி மாணவா்கள் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, அட்டவணை உயர்கல்வி வழிகாட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய 2025- 2026 ஆம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.