"அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்" - ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது ஈஸ்டர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார் என்று பைபிள் கூறுகிறது.
இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை தான் கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பிராத்தனை செய்தனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி pic.twitter.com/wuIX6xqAAY
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 20, 2025
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்! உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்! அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்!" என தெரிவித்துள்ளார்.