தாயின் கண்முன்னே மகளை தூக்கிச் சென்ற சிறுத்தை - சிறுமியை தேடும் பணி தீவிரம்!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோயில் குடியிருப்பு அருகில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, மோனிகா தேவி தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் மகள் ரோஷினி குமாரி (6 வயது).
இந்த நிலையில் ரோஷினி குமாரி வீட்டிற்கு வெளியே தண்ணீர் பிடிக்கும் இடத்தில் நின்றுள்ளார். அப்போது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை தாயின் கண் முன்னே சிறுமியை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வால்பாறை காவல்துறை அதிகாரி மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த தொடர் மழை காரணமாக சிறுமியை தேடும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தேடும் பணி துவங்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் வீரா மற்றும் வைரவா ஆகிய இரண்டு மோப்ப நாய்களை கொண்டு சிறுமியை தேடி வருகின்றனர். தொடர்ந்து ட்ரோன் கேமரா உதவியுடன் உடலை தேடும்பணி தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.