நீலகிரியில் நாயை வேட்டையாட வந்த சிறுத்தை- ஓட ஓட விரட்டிய நாய்!
நீலகிரி குன்னூர் பகுதியில் நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தையை ஒரு நாய் ஓட ஓட விரட்டியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெலிங்டன் பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை சமீப காலமாக வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குறிப்பாக, பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் ஓய்வெடுத்து வரும் சிறுத்தைகள், இரவு நேரங்களில், அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, வீட்டின் வெளியே இருக்கும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தை வேட்டையாட வந்தது. அந்த வீட்டின் முன் இருந்த நாயை சிறுத்தை துரத்தி, துரத்தி வேட்டையாட முயன்றது. பின்பு, செடிகளிடையே மறைந்திருந்த சிறுத்தை, வீட்டின் உரிமையாளர் மின்விளக்கை ஒளிரவிட்டதும் ஓடி மறைந்தது. சிறுத்தையிடம் சிக்கிய நாய் உயிருக்கு போராடிய காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.