‘லால் சலாம்‘ இசை வெளியீட்டு விழா அப்டேட் - ரஜினியின் குட்டிக்கதைக்காக காத்திருப்பதாக ரசிகர்கள் பகிர்வு!
லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரஜினி தனது ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் கூறியது போல இந்த விழாவிலும் குட்டிக்கதை கூறுவாறா என ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டார். அவர் பகிர்ந்த ரஜினிகாந்தின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதனைதொடர்ந்து ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் வெளியாகி 675 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.
இதனைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகை அன்று, வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், அந்த வீடியோவில் லால் சலாம் திரைப்படம் பொங்கல் அன்று வெளியிடப்படுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் பரவியதையடுத்து, ரஜினி ரசிகர்கள் ரஜினி தனது பாணியில் குட்டி ஸ்டோரியை இந்த இசை வெளியீட்டு விழாவில் சொல்லுவாரா? இல்லையா? என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.