இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய லகி-லகி எரிமலை!
இந்தோனேசியா நாட்டில் லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலுள்ள சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதோடு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதில் பசிபிக் நெருப்பு வளையம் என்பது உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலை சுற்றி கடலுக்கு அடியிலும், நிலத்திலும் இருக்கும் நிலத்தட்டுகளில் அமைந்திருக்கும் எரிமலைகளில் வளைவான தொடராகும்.
இப்பகுதியில் அமைந்திருக்கும் எரிமலைகள், அவ்வப்போது வெடிப்பதால் சுனாமி மற்றும் பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவிலும் அதிக அளவிலான எரிமலைகள் உள்ளன. இதில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் தீவு நாடான இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கூட்டத்தில் பாலி தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் 1,500 மீட்டர் உயர லிவோட்பி என்ற எரிமலை உள்ளது. அங்கு உள்ளூர் மக்களால் லகி-லகி என்று அழைக்கப்படும் இந்த அதிபயங்கர எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்றும் லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. அதுமட்டுமின்றி அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிமலை காரணமாக வானில் சுமார் 5000 மீட்டர் உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. மேலும் சுமார் 10000 மீட்டர் உயரத்திற்கு புகை மண்டலமாக மேலழுப்பி வானில் கலந்தது.
இந்த புகை மண்டலம் காரணமாக இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட இருந்த 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பாலிதீவுக்கு விமான சேவை தடைப்பட்டது. இதனால் விமான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.