"உழைப்பாளர் தினம்" - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"உழைப்பாளிகளின் உரிமைகளை வென்றெடுத்த மே தின நன்னாளில் உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'மே தின' நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நாள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தொழிலாளர்கள். அவர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை, வேறுபாடு இல்லை, உழைப்போர் அனைவரும் சமமானவர்கள்.
இந்த மே தின நன்னாளில், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம். உழைக்கும் தொழிலாளர்களை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொண்டு, தொழிலாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன். உழைக்கும் பெருமக்களுக்கு மீண்டும் எனது தொழிலாளர் தின நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.