தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சங்க அறக்கட்டளை!
குவைத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் நல அறக்கட்டளை சார்பாக குவைத் மண்டல புதிய நிர்வாக அறிமுக கூட்டம் நடைபெற்றது.
குவைத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் நல அறக்கட்டளை சார்பாக குவைத் மண்டல புதிய நிர்வாக அறிமுக கூட்டம் நேற்று குவைத் சிட்டி பாலிவுட் உணகத்தில் நடைபெற்றது. இந்த அறிமுக கூட்டத்தில் மாநில மீனவர் அணி செயலாளர் நவ்சாத் அலி கலந்து கொண்டார். இந்த அறிமுக கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர் S.M.ஹைதர் அலி, பொறியாளர் ஹமீத் ரபீக் முகம்மது, டாக்டர் ஜேம்ஸ் பேரிடி, சிதம்பரம் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க காப்பீடு திட்டம், கல்வி உதவி, திருமண உதவி திட்டம் கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதாகை ஏந்தி குவைத் வாழ் அனைத்து தமிழ் அமைப்புகளும் சேர்ந்து நன்றி தெரிவித்தனர்.
காப்பீடு திட்டத்தில் வயது வரம்பை 55 - தில் இருந்து 59 வயது வரை கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசின் அடையாள அட்டை பெறுவதில் பாஸ்போர்ட் மற்றும் எந்த நாட்டில் பணியாற்றுகிறார்களோ அந்த நாட்டின் குடியுரிமை அட்டை மட்டுமே ஆவணமாக பதிவிட செய்திட வேண்டும். இயற்கையாக மரணிப்பவர்களுக்கும் காப்பீடு திட்டம் கிடைத்திட வழி வகை செய்திட வேண்டும்.
மேலும், வெளிநாட்டில் இருந்து தாயகம் சென்ற சூழலில் மரணித்தாலும் காப்பீடு கிடைத்திட செய்திட வேண்டும். தனி வங்கி துவங்கி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க ஓய்வுதிய திட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் தீர்மானமாக கொண்டு வரப்பட்டன.
இதையும் படியுங்கள் : கடலூரில் ‘கருடன்’ திரைப்படம் பார்க்க நரிக்குறவர்கள் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு! திரையரங்கு மீது குற்றச்சாட்டு!
இந்த கூட்டத்தில் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் பூதமங்கலம் நூர் முகமது, குவைத் பொறுப்பாளர் இதயத்துல்லா, செயலாளர் வீரமணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் குவைத் தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மஜக, முஸ்லிம் லீக், தேவர் பேரவை, தேசம் அமைப்பு, சங்கங்கள் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு சிறபித்தனர்.