கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா - 32 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தேரோட்டம்!
கோவை, கோட்டைமேட்டில் அகிலாண்டேஸ்வரி உடனமர், சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் தைப்பூசம், சித்திரை திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூசம் தேரோட்டம் நடைபெற்றது.
ஆனால் இந்தக் கோவிலில் கடந்த 1993 ஆம் ஆண்டு சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 32 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்று உள்ளது.
இதையொட்டி கடந்த 4ம் தேதி இந்த கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை வாகனம், கைலாச வாகனம், மூசிய ரிஷப வெள்ளி மயில் வாகனம் ஆகிய வாகனங்களில் சாமி திருவீதி உலா நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்று உள்ளது. இதில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கௌமார மடாலயம் சிறை ஆதீனம் குமரகுருபர சாமிகள் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து
தொடங்கி வைத்தனர்.
தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு பெருமாள் கோவில், ஒப்பனக்கார வீதி, மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது. தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை பதிவேட்டை, பன்னிரண்டாம் தேதி மாலை 6.30 மணிக்கு தெப்ப உற்சவம் மற்றும் திருவீதி உலா நடைபெற உள்ளது. 17ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு வசந்த உற்சவம் 15 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஊஞ்சல் விளையாட்டு உற்சவம் நடைபெறுகிறது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களை கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.