கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து !
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த போது, நேற்று ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயில் விபத்து, தண்டவாளத்தை ஒட்டி இருந்த எலக்ட்ரிக் போஸ்டில் மோதிய பின் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரி கூறியுள்ளார். விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது.