For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கணியன் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்...
12:54 PM May 06, 2025 IST | Web Editor
கொடநாடு கொலை  கொள்ளை வழக்கு  சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்
Advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள், சயான் உள்ளிட்ட பலரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது.

Advertisement

அப்போது, பங்களாவில் இருந்ததாகக் கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுவரை இந்த வழக்கில் 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, முக்கிய குற்றவாளியான கனகராஜின் சர்வதேச தொலைபேசி அழைப்பு விவரங்களை Interpol மூலம் பெறுவதற்கு CB-CID முயற்சித்து
வருகிறார்கள்.

கடந்த 2017 ஏப்ரல் 23ஆம் தேதி ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.

குற்றவாளிகளின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக Interpol-இன் உதவியை நாடியுள்ளனர். மேலும், இவ்வழக்கில் கூடுதல் சாட்சிகளையும் விசாரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கணியன் பூங்குன்றன் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் பங்களாவில் கொள்ளை போன பொருட்கள்
குறித்து விசாரணை நடைபெறலாம் என்றும் தெரிகிறது.

ஜெயலலிதா இருந்தவரை எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட பூங்குன்றன், அவரது மறைவுக்குப் பிறகு அமைதியாக அரசியலிலிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் ஒதுங்கினார். தற்போது தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து விவசாயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குன்றனின் இந்த ஆஜர், கொடநாடு வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement