'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திலிருந்து 'Kissa 47' பாடல் நீக்கம்?
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் சந்தானம். கடந்த 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2019ல் தில்லுக்கு திட்டு படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவர் நடித்த தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டர்ன்ஸ் படங்கள் ரசிக்கும் படி அமைந்தது. குறிப்பாக டிடி ரிட்டர்ன்ஸ் படம் சிறந்த கமெடி படமாக பேசப்பட்டது.
தற்போது இதன் மூன்றாம் பாகமாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உருவாகி உள்ளது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆப்ரோ இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் நாளை (மே 16) தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து 'கோவிந்தா' (கிஸ்ஸா 47) என்று தொடங்கும் பாடல் வெளியானது. அதில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பாடல் உள்ளதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர் மீது திருப்பதி காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் செய்தனர்.
மேலும், அந்த பாடலை படத்திலிருந்து நீக்கக் கோரியும், ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டும் பட நிறுவனத்திற்கும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படக்குழுவினர் படத்தில் இருந்து (கிஸ்ஸா 47) கோவிந்தா என்ற பாடலை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.