கிட்னி திருட்டு : சிறப்பு புலனாய்வு குழு விசாரணையைத் தொடங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை வாசித்ததும் அவை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்த தொடர்ந்து நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் கூடியது. கூட்டத்தில் கரூர் துயரம், கிட்னி திருட்டு விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து, இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டம் இன்று கூடியுள்ளது. இந்த கூட்டத்தில், 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. கூட்டத்தில் கிட்னி திருட்டு விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து, ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். அதேபல், அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் கிட்னி திருட்டு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசியவர், "விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரை தமிழ்நாடு அரசின் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது.
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையை தொடங்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.