பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்... கரூரில் பரபரப்பு!
கரூர் மாவட்டம் ஈசநத்தத்தை அடுத்த அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி, தாந்தோன்றிமலையில் உள்ள அரசு கலை கல்லூரியில் 3ம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் இன்று வீட்டிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஏறி பயணம் செய்தார். பொன்நகர் பேருந்து நிறுத்ததில் இறங்கிய அந்த மாணவி சக மாணவிகள் 3 பேருடன் கல்லூரி நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ஆம்னி வேனுடன் தயாராக இருந்த இளைஞர் மாணவியை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது. அருகில் இருந்த சக மாணவிகள் கத்தில் கூச்சலிட்டதை அடுத்து ஆம்னி வேன் வேகமாக சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடத்தப்பட்ட மாணவியுடன் வந்த சக மாணவிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடத்தப்பட்ட மாணவியை, அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கிராமத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்ததாகவும், அந்த இளைஞர் மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும், அதனை நீக்கும் படி கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் அந்த இளைஞரை திட்டியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, அந்த இளைஞர் தனது குடும்பத்தினருடன் வந்து கல்லூரி மாணவியை கடத்தியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சக மாணவிகள் வேனின் பதிவு எண்ணை கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் மாவட்ட எல்லைகள், காவல் நிலைய எல்லைகளில் செக்போஸ்ட்கள் அமைத்து மாணவியை தேடி வருகின்றனர்.