கேரளா விரைந்தது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு!
கேரளாவில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளில் நீர்புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில், 4 குழுக்கள் நவீன மீட்பு உபகரணங்களுடன் கேரள மாநிலம் பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு கேரளா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டதின் பேரில் இன்று காலை புறப்பட்டனர்.
ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர்.