மசோதாக்களை தாமதப்படுத்துவதாக கேரள அரசு தொடர்ந்த வழக்கு - உச்ச நீதிமன்றம் அதிரடி!
மசோதாக்களை தாமதப்படுத்துவதாக கேரள அரசு தொடர்ந்த வழக்கில், கேரள ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கும், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரளாவில் அம்மாநில அரசுக்கும், கேரள ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கேரள முதலமைச்சர், ஆளுநருக்கு பலமுறை வலியுறுத்தியிருந்தார். ஆனால் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் காலம் தாழ்த்தி வந்ததால், கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதால், அரசின் செயல்பாடுகள் முடங்கியிருப்பதாகவும், ஆளுநருக்கு ஒரு கால வரம்பை நிர்ணயம் செய்து அந்த கால வரம்புக்குள் ஆளுநர் மசோக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்ககப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கேரளா அரசு தொடர்ந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இதே பிரச்சனையுடன் நாங்களும் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம் என மேற்குவங்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மேற்குவங்க மாநில ஆளுநர் செயலாளர் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.