கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைந்தாலும், இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாட்களில் வெயில் உக்கிரமாக இருக்கும் எனக் கூறுவார்கள். ஆனால் இந்த கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வெளுத்து வாங்கியது. பல மாவட்டங்களில் வெயில் சதமடித்தும் வந்தது. இதனையடுத்து கத்திரி வெயில் தொடங்கியதிலிருந்து வெயில் வாட்டி வதைத்தது.
இதனால் வெப்ப அலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனவும், கோடை மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி பெய்த கோடை காலம் கொஞ்சம் வெப்பத்தை தணித்தது. இதற்கிடையே வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வினால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது.
இந்நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.