கன்னியாகுமரி | இன்று வெளிநாடு செல்ல பிளான்... குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்... சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கொத்தனார் வேலை செய்து வந்த சூழலில் இன்று (ஜுன் 7) வெளிநாட்டிற்கு செல்ல இருந்தார். இந்த நிலையில், இவர் நேற்று (ஜுன் 6) இரவு தனது குழந்தைகளுக்கு மார்த்தாண்டம் பகுதியில் இருந்து பிரியாணி வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : பெங்களூரு துயர சம்பவம் | கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்… போலீசார் சொன்ன முக்கிய தகவல்!
இவர் குழித்துறை சந்திப்பு பகுதியில் வந்தபோது கனிம வளம் ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி இவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், இந்த விபத்து காரணமாக ஆத்திரமடைந்த ஊர்மக்கள் கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கு எதிராக பேசியதுடன் காவல் துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து களியக்காவிளை போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று வெளிநாடு செல்ல இருந்த நிலையில் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்க சென்றவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.