தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்களை வழங்கினார் கனிமொழி எம்.பி!
கனிமொழி எம்.பி தூத்துக்குடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தொடர்ந்து 4-வது நாளாக நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தொடர்ந்து மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே நேற்று (டிச.20) தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து படகில் பயணித்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
இதையும் படியுங்கள்: கல்லூரி விரிவுரையாளர் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?
மேலும், அரசு அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி மூலம் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பால், பிஸ்கெட், குழந்தைகளுக்கான பால் பவுடர் மற்றும் சமைக்க தேவைப்படும் அரசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வேண்டும் என்று கோரினார்.
அதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் கனிமொழி எம்.பி கோரிய நிவாரண பொருட்களைப் படகில் கொண்டு சேர்த்தனர். பின்னர், கனிமொழி மக்கள் கோரிய உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி, வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் கனிமொழி ஏரல் சுற்றியுள்ள கிராமங்களுக்கு டூ வீலரில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்டார்.