திமுக - மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளிவைப்பு? 3 நாட்களுக்குள் முடிவு எட்டப்படும் எனவும் தகவல்!
திமுக - மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சில் முடிவு எட்டப்படாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணி மற்றும் தொகுதிபங்கீடு இறுதியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்தலில் திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தைகளை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிது.
இதுவரை இருதரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக உறுதிப்படுத்தாத நிலையில், வெளியாகும் தகவல்களையும் இரு கட்சியினர் தரப்பில் மறுக்கவில்லை. இந்நிலையில், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, இன்று திரைப்பட படப்பிடிப்பிற்காக கமல்ஹாசன் வெளிநாட்டிற்கு செல்ல இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படப்பிடிப்பிற்கான கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையேயான கூட்டணி இரண்டு மூன்று நாட்களில் இறுதியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.