கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரனுக்கு ஜாமின் மறுப்பு!
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி சுமார் 67 பேர் மரணம் அடைந்தனர். பலர்க்கு கண்பார்வை பாதிக்கப்பட்டது. இந்த வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்வது, கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யபட்டனர்.
சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த இந்த வழக்கை, சிபிஐக்கு மாற்றி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, பரமசிவம் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை உயர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவர்களிடம் இருந்து விஷ சாராய மாதிரிகள் பறிமுதல் செய்யபட்டு, இவர்கள் தான் விற்பனை செய்தனர் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மோசமான மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டும், குற்றவாளிகள் இவர்களுக்கு விதமான கருணையும் காட்டக்கூடாது. இவருக்கு எதிராக 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 8 மாதங்களுக்கு மேல் இவர்கள் சிறையில் உள்ளனர். தாமோதரன் உடல் ஊனமுற்றவர். விஜயா ஒரு பெண் என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்கு உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் இருவருக்கும் தற்போது ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். பின்னர் இருவரின் மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இருவரின் மனுக்களை திரும்ப பெற அனுமதி அளித்து, ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதே வேளையில் பரமசிவம், விஜயா இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.