"ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் #MKStalin பேச்சு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3வது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் பேசினர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது,
"தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசி அரசியல் செய்யக்கூடாது. அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். அது தொடர்பாக அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் சி.பி.ஐ.யிடம் போனபிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவே 12 நாட்கள் ஆனது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் புகார் அளித்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. திமுக அரசின் மீது களங்கம் ஏற்படுத்த சிலர் எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் எடுபடாது. உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி அவர்களின் கல்வியை கெடுக்க வேண்டாம். 100-க்கும் மேற்பட்ட சார்கள் குறித்த கேள்வியை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும்.
எந்த பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. யார் அந்த சார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால், அதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல. திமுக ஆதரவாளர் மட்டுமே. ஞானசேகரன் திமுக ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை. திமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம். ஞானசேகரன் அமைச்சருடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் திமுகவில் இல்லை"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.