’நீதிபதி யஷ்வந்த வர்மா விவகாரம்’- 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த மார்ச் மாதம் இவருக்கு சொந்தமான பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க சென்ற தீயணைப்பு படையினரால் அவரது வீட்டின் அவுட்ஹவுசில் இருந்து கட்டுகட்டான பணம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த பணத்தை கைப்பற்றினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்-ஹவுஸ் விசாரணையும் நடத்தியது. அந்த விசாரணை குழு தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் , உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்திருந்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கும் சில நாள்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, நீதிபதிகள் 3 பேர் உள்ளடக்கிய குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார். இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை இந்த தீர்மான முன்மொழிவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், குழுவின் அறிக்கையில் நீதிபதி மீதான குற்றச்சாட்டு உறுதியாகும்பட்சத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீதிபதி பதவி நீக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவித்தார். மேலும் அவர், வாக்கெடுப்பில் 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.