#JuniorAsiaCupHockey | பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்திருந்தன.
இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. அதன்படி, நேற்று முன்தினம் டிச.3) நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், பாகிஸ்தான் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இறுதிப்போட்டிநேற்று (டிச.4) இரவு நடைபெற்றது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் இந்திய அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி இதற்கு முன் 2004, 2008, 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது.