நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8 உள்ளூர் விடுமுறை... வெளியான முக்கிய அறிவிப்பு!
திருநெல்வேலியில் பிரசித்திபெற்ற நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த்தாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆனி பெரும் திருவிழா இன்று (ஜூன் 30) கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் ஜூலை 8ம் தேதி நடைபெறுகிறது .
இதனையொட்டி, ஜூலை 8ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 19 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.