இன்று சென்னை வருகிறார் ஜெ.பி.நட்டா | கூட்டணி குறித்து ஆலோசனை....
சென்னையில் ஜெ.பி.நட்டா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒருநாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகிறார். டெல்லியில் இருந்து காலை 9.20 மணியளவில் புறப்படும் நட்டா, சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 12.45 மணியளவில் வரவுள்ளார். விமான நிலையத்தில் அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்கின்றனர்.
அங்கிருந்து தனியார் ஓட்டலுக்குச் செல்லும் நட்டா, பிற்பகல் 12.55 மணியளவில் அங்கு நடைபெறும் மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த கூட்டத்தில் சுமார் 13 முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் நட்டாவை சந்திக்கின்றனர். தமிழகத்தில் தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனை நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து 3.45 மணியில் இருந்து 5 மணிவரை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் 5,000 நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், பூத் கமிட்டியை வலுப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்தும் நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து, 200-வது சட்டப்பேரவைத் தொகுதியாக துறைமுகம் தொகுதியில் நடைபெற உள்ள அண்ணாமலையின் நடைபயணத்தில் நட்டா கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து மாலை 7 மணிக்கு தங்கசாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.