தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு – பஞ்சாப் முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர்கள், மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், ஜோசப் கே.மணி, சமூக புரட்சி கட்சியைச் சோ்ந்த என்.கே.பிரேமசந்திரன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி.ராமாராவ், கா்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாா், மேற்கு வங்கத்தில் திரிணமுல் கட்சியின் பிரதிநிதி ஒருவா், அதே மாநிலத்தில் இருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது சலீம், ஒடிஸாவின் பிஜூஜனதா தளத்தின் பிரதிநிதி, அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பக்தசரண் தாஸ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான், அகாதலி தளம் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்பி, மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி என்விஎன் சோமு ஆகியோர் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானை இன்று (மார்ச் 19) நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.