ஜிலிங்கோ நிறுவனத்தில் என்ன நடக்கிறது? இணை நிறுவனர் மீது அங்கிதி போஸ் புகார்!
ஜிலிங்கோ நிறுவனத்தின் நிறுவனரான அங்கிதி போஸ் தனது சக இணை நிறுவனரான துருவ் கபூர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்துள்ளார்.
ஜிலிங்கோ நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தவர் அங்கிதி போஸ். இவர் ஜிலிங்கோ என்ற தனது சொந்த நிறுவனத்தை துருவ் கபூர் என்பவருடன் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்நிலையில் கடந்த ஆண்டு நிறுவனத்தின் நிதி முறைகேடு மற்றும் தவறான மேலாண்மை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தனது சொந்த நிறுவனத்தில் இருந்தே அங்கிதி போஸ் நீக்கப்பட்டார்.
நிர்வாக குழுவின் ஒப்புதல் இல்லாமல் அங்கிதி போஸ் தனது சம்பளத்தை பத்து மடங்கு உயர்த்தியதாகவும், எவ்வித காரணங்களும் இன்றி 10 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை பல்வேறு வியாபாரிகளுக்கு கொடுத்திருப்பதாகவும். மகேஷ் மூர்த்தி என்ற நிதி முதலீட்டாளர் அங்கிதி போஸுக்கு எதிராக 100 மில்லியன் டாலர் மதிப்பிலான நஷ்ட ஈடு வழக்கை தொடுத்து நடத்தி வருகிறார்.
தற்போது சக இணை நிறுவனர் துருவ் கபூர் மற்றும் முன்னாள் சிஓஓ ஆதி வைத்யா மீது குற்றவியல் புகார் ஒன்றை அங்கிதி போஸ் அளித்துள்ளார். சதி, துன்புறுத்தல், ஏமாற்றுதல், மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி புகார் அளித்துள்ளார். தன்னையும், தனது நிறுவனத்தின் முதலீட்டாளர்களையும் நீதி ஆதாயங்களை பெற தவறாக வழிநடத்தியதாகவும் இருவர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இருவரும் தனது வணிகத்தை கைவிட வற்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தன்னிடம் பல நிறுவனங்களை பற்றிய உண்மையான தகவல்களை கூறாமல் மறைத்ததாகவும் துருவ் கபூர் மற்றும் ஆதி வைத்யா மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.