சரிந்தது ஜார்க்கண்ட் அரசியல் தூண்! சிபு சோரன் மறைவு - திரௌபதி முர்மு, மோடி நேரில் அஞ்சலி!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பழங்குடியின தலைவருமான சிபு சோரன், தனது 81-வது வயதில் இன்று காலமானார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு இந்தியத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் வைக்கப்பட்டுள்ள சிபு சோரனின் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜார்க்கண்டின் அரசியல் வளர்ச்சிக்கு சிபு சோரன் ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்த அவர், அவரது மறைவு இந்திய அரசியலுக்கு ஒரு பேரிழப்பு என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று சிபு சோரனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த தலைவரின் உடலுக்கு மரியாதை செலுத்திய பிரதமர், அங்கிருந்த ஜார்க்கண்ட் முதலமைச்சரும், சிபு சோரனின் மகனுமான ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
துக்கத்தால் உடைந்துபோன ஹேமந்த் சோரனை அரவணைத்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிரதமர், சிபு சோரனின் இழப்பு குறித்து தனது இரங்கலையும் வெளிப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து சிபு சோரன் மூன்று முறை ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரான இவர், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு முக்கியமான தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.