ஜப்பானில் புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் சரிவு - சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!
ஜப்பானில் 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் அதிக அளவில் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில்,
"ஜப்பானில் 2024-ஆம் ஆண்டு 6 லட்சத்து 86,ஆயிரத்து 61 குழந்தைகள் பிறந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட 5.7 சதவீதம் குறைவு. இது 1899-ஆம் ஆண்டு முதல் பதிவு தொடங்கியதிலிருந்து முதல் முறையாக ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. தொடர்ச்சியாக 16-வது ஆண்டாக பிறப்பு விகிதம் சரிவைக் சந்தித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 1949-ஆம் ஆண்டு போருக்குப் பின் குழந்தை பிறப்பு 27 லட்சம் என்ற உச்சத்தில் இருந்ததை விட கால் பங்காகும். வயதான மற்றும் குறையும் மக்கள்தொகை கொண்ட ஜப்பானின் இந்த தரவுகள், 'மௌன அவசரநிலை' என்று பிரதமர் ஷிகேரு இஷிபா எச்சரித்துள்ளார்.
ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் வயதானவர்களின் விதிக அதிகரிப்புடன் போராடும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஜப்பானும் ஒன்று. தென் கொரியா மற்றும் சீனா ஆகியவை அதிக குழந்தைகளைப் பெற தம்பதியரை ஊக்குவிக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. ஜப்பானின் தற்போதைய 12.4 கோடி மக்கள்தொகை 2070-ஆம் ஆண்டில் 8.7 கோடியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.