வெள்ள நிவாரண தொகை பெற நாளை கடைசி நாள் - நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகையை பெற ஜன. 3ம் தேதிதான் கடைசி நாள் என்பதால், டோக்கன் பெற்றவர்கள் நாளை நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைகளின் அடிப்படையில், அதிக பாதிப்புள்ள பகுதிகளுக்கு 6000 ரூபாயும், மற்ற பகுதிகளுக்கு 1000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்காக 220 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண தொகையை பெறுவதற்கு நாளையே கடைசி நாள் என்றும் டோக்கன் பெற்றவர்கள், நாளை கட்டாயம் நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கடைசி நாளான நாளை மாலை 5 மணி வரை நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.