ஜம்மு காஷ்மீர் | சுயேட்சை எம்பி Engineer ரஷீதுக்கு பரோல் - பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி!
கடந்த வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து NIA-வால் குற்றம் சாட்டப்பட்டு 2019 முதல் சிறையில் இருக்கும் இன்ஜினியர் ரஷீத், சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இன்ஜினியர் ரசீத் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றபோதும் அவர் சிறையில் இருப்பதால் அவரால் மக்களவை உறுப்பினராக மக்களவையில் பதவியேற்க முடியவில்லை. கடந்த ஜூன் 29ம் தேதி, ரஷீத்தின் பதவிப் பிரமாணத்தை எளிதாக்குவதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிய மனுவிற்கு பதிலளிக்குமாறு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிரண் குப்தா, என்ஐஏ-வுக்கு உத்தரவிட்டார்.
அதற்கு பதிலளித்த என்ஐஏ சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஜினியர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றம் இறுதி உத்தரவு வழங்கியதும் நிறைவேற்றப்படும் எனவும் என்ஐஏ தெரிவித்தது.
இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் அவரை நாடாளுமன்றத்தில் பங்களிக்க அனுமதி வழங்க வெண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் ( டிபிஏபி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், “மக்களவைத் தேர்தலில் பொறியாளர் ரஷீத் அமோகமான மக்கள் ஆதரவுடன் தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளதால், அரசு ஆணையை ஒப்புக்கொண்டு அவரைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் காஷ்மீரின் 4 மாவட்டங்களில் உள்ள அவரது தொகுதியினர் தாமதமின்றி பிரதிநிதித்துவத்திற்கு தகுதியானவர்கள் என்றும் அவரது வேட்புமனுவை சட்டம் அனுமதித்திருந்தால், பாராளுமன்ற நடவடிக்கைகளில் அவர் முழுமையாக பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் 11,13 தேதிகளில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா எம்.பி அப்துல் ரஷீதுக்கு பரோல் டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.