அவனியாபுரத்தில் விறுவிறுப்பு: சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு பரிசாக காத்திருக்கும் கார்!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணி அளவில் கோலாகலமாக தொடங்கிய நிலையில், சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் – ஏராளமான பக்தர்கள் வருகை..!
இதனைத் தொடர்ந்து இன்று காலை உலக புகழ்பெற்ற மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா என பலர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற உடையணிந்து வீரர்கள் களமிறங்கினர்
இதனை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வாடிவாசலில் சீறி வரும் காளைகளை காளையர்கள் தீரடத்துடன் அடக்கி வருகின்றனர். சில காளைகள் யாரும் தொட முடியாத வகையில் வாடிவாசலில் நின்று விளையாடும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த காளைக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.