“வேதனையாக இருக்கிறது” - விமான விபத்தில் நண்பரை இழந்ததாக 12-த் ஃபெயில் நடிகர் உருக்கம்!
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று(ஜூன்.12) லண்டனுக்கு ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்டது. 242 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் சில நிமிடங்களில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மருத்துவ மாணவர்கள் விடுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க, இதுவரை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்த காரணம் கண்டறிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் விமான விபத்தில் தனது நண்பரை இழந்துள்ளதாக 12-த் ஃபெயில் பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னதாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "அகமதாபாத்தில் நடந்த கற்பனை செய்ய முடியாத துயரமான விமான விபத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் மாமா கிளிபோர்ட் குந்தர் தனது மகன் கிளைவ் குந்தரை விபத்தில் இழந்துள்ளார் என்பதை அறிந்து இன்னும் வேதனையாக இருக்கிறது. அவர் அந்த துரதிர்ஷ்டவசமான விமானத்தை இயக்கிய அதிகாரி. கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும். மாமாவிற்கும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பலம் அளிக்கட்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த பதிவால் உயிரிழந்தது விக்ராந்த் மாஸ்ஸின் மாமா மகன் என்று செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், கிளிஃபோர்ட் குந்தர் தனது குடும்ப நண்பர் என்று மற்றொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அதில் “ஊடகங்களிலும் மற்ற இடங்களிலும் உள்ள அன்பான நண்பர்களே, துரதிர்ஷ்டவசமாக இறந்த கிளைவ் குந்தர் எனது உறவினர் அல்ல. குந்தர் குடும்பத்தினர் எங்கள் குடும்ப நண்பர்கள். இனி யூகங்கள் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.