“வெறுப்பு உருவாகாமல் பார்த்துக் கொள்வது எனது கடமை” - L2E படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மோகன்லால் வருத்தம்!
மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கம் மற்றும் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் `எல்2; எம்புரான்' என்ற தலைப்பில் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இதில் பிரித்விராஜ் மற்றும் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் 2 நாளில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக கூறி சமூக வலைத் தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அத்தகைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாகவும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என நடிகர் மோகன் லால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூக் பதிவில், “ 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தில் உள்ள சில அரசியல் மற்றும் சமூக கருப்பொருள்கள், என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிந்தேன்.
ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதக் குழு மீது வெறுப்பு உருவாகாமல் பார்த்துக் கொள்வது எனது கடமை. அதனால், எம்புரான் குழுவினரும் நானும் எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மனமார்ந்த வருந்துகிறோம். மேலும் அதற்கான பொறுப்பு படத்தின் பின்னணியில் பணியாற்றிய நம் அனைவரின் மீதும் உள்ளது என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திலிருந்து நிச்சயமாக நீக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்த நான்கு தசாப்தங்களாக, நான் எனது திரைப்பட வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும்தான் என் ஒரே பலம்”
இவ்வாறு நடிகர் மோகன் லால் தெரிவித்துள்ளார்.