”தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் ஆக்கக் கூடாது என்பது அரைவேக்காடு தனமானது”- கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்!
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திய தூய்மைப் பணியாளர்க சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்கள் போராட்டம் நடத்தியனர். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையியில் காவல் துறை. போராட்டத்தினரை அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து திருமாவளவன் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதென்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருமாவளவனின் கருத்தினை புதிய தமிழகம் கட்சி நிறுவனர் விமர்சித்துள்ளர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“இந்திய தேசத்தில் தூய்மைப் பணியாளர்களின் துயரத்தை எவருடனும் ஒப்பிட முடியாது. மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றும் பணி அவ்வளவு எளிதானதல்ல. இத்தொழிலில் அடிமைப்படுத்தப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள பட்டியலினச் சில பிரிவு மக்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். திடீரென ஒப்பந்தப் பணியாக இன்னொரு நிறுவனத்திற்கு மாற்றப்படும்போது, அவர்களின் பணி மூப்பு, சம்பளக் குறைப்பு, பணி இழப்பு உட்படப் பல பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே, தங்களின் இன்றைய வாழ்வாதாரம் தூய்மைப் பணிதான். எனவே அதை நிரந்தரமாக்கு எனக் கூறுவதில் நூற்றுக்கு நூறு சதவீதம் நியாயம் உண்டு. ஆனால் அந்த அரைகுறைத் தொழிலுக்கும் வேட்டு வைப்பதில் என்ன நியாயம்? ஆட்சி அதிகாரத்தில் எவ்விதப் பங்கும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் சில சீட்டுகளுக்காகக் கூட்டணி வைத்துக் கொள்வதே இன்றைய தமிழக அரசியலில் நிலை. அக்கூட்டணிக்குள் அங்கம் பெற்று விட்டோம் என்பதற்காகவே ஆளுங்கட்சி செய்யும் தவறுகளையும் தங்கள் தோளில் போட்டுக் கொண்டு தமிழகத்தில் நடைபெறும் எல்லா அத்துமீறல்களுக்கும் முட்டுக் கொடுத்து, தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் ஆக்கக் கூடாது எனச் சொல்வது அதிமேதாவித்தனம், அற்பத்தனம், அரைவேக்காடு தனம், கொத்தடிமையிலும் கொத்தடிமை எனக் குறிப்பிடுவதே சாலச் சிறந்ததாகும்.
கொத்தடிமைத்தனம் கொண்டவர்களை ஆங்கிலத்தில் கீழ்க்கண்டவாறு கூறுவார்கள்: "Loyal to the king than the king himself". அதேபோல ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம் காட்டுகிறார் ஒருவர்.
உள் இட ஒதுக்கீட்டில் பச்சைத் துரோகம் செய்தவர்; திண்ணியத்தில் மலம் திணிக்கப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றவர், திவ்யா-இளவரசன் கெளரவக் கொலையை பின்வாங்கியது போல, வேங்கைவயலில் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போதும் அரசை கண்டிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டது போல இப்பொழுது தூய்மைப் பணியாளர்களைத் தன்னுடைய சுயநலத்திற்காகக் காட்டிக் கொடுக்கவும் தயாராகிவிட்டார்கள்.
சென்னையைத் தாண்டி, நெல்லை, மதுரை எனப் பல பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர் பணிகளை நிரந்தரமாக்க வலியுறுத்திப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. கொரோனா காலகட்டத்திலும்; புயல், வெள்ளக் கால கட்டங்களிலும் அவர்களின் உழைப்பைச் சுரண்டி நன்கு பயன்படுத்திக் கொண்ட பிறகு சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியை ரூபாய் ஆயிரம் கோடிக்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை கண்டிக்காமல் அப்பணியாளர்களைத் தற்காலிகப் பணியாளர்கள் என்று கூறி தனியார்மயத்திற்குத் துணை போவது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் மட்டுமல்ல; ஏழை எளிய மக்களை மீண்டும் மீண்டும் காட்டிக் கொடுக்கும் கருங்காலித்தனம் ஆகும்"
என்று தெரிவித்துள்ளார்.